×

திருவண்ணாமலை கோயில் முன் வணிக வளாகத்தை எதிர்த்த மனு: ஜூன் 2க்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பு 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து 2023 செப்டம்பர் 14ல் அரசாணை பிறப்பித்தது. இதை ரத்து செய்யக் கோரி கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், புராதன கட்டிடமான ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோயிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும்.

விழா காலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும். கோயில்களில் கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடர்பாக, மாநில அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை. வணிக வளாகம் கட்ட கோயில் நிதி பயன்படுத்த உள்ளது. எனவே, வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும், அதை ரத்து செய்ய வேண்டும், கோயில் நிதியை மீண்டும் கோயில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது.

எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படாது என்று ஏற்கனவே அறநிலையத் துறை தரப்பில் உறுதி அளிப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றம் செய்து ஜூலை 2க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

The post திருவண்ணாமலை கோயில் முன் வணிக வளாகத்தை எதிர்த்த மனு: ஜூன் 2க்கு விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,CHENNAI ,Endowments Department ,Arunachaleswarar Temple ,Tiruvannamalai temple ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...